உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நவீன மருத்துவ வசதிகளுடன் 8 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் சுரங்கம் கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த நவ. 12 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர்.
கடந்த 17 நாள்களாக சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளா்களை மீட்கும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், பொறியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களை மீட்க, குழாய்களை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர் வி.கே.சிங், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி உள்ளிட்டோர் அங்கே முகாமிட்டுள்ளனர். தொழிலாளர்களின் உறவினர்களும் அங்கே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சுரங்கத்திலேயே 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளுடன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு மருத்துவ நிபுணர்களும் தயாராக உள்ளனர்.