ஐந்து மாநிலத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18% பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தெலங்கானாவுக்கு நாளை(நவ. 30) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் 5 மாநிலத் தேர்தல்களில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18% பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தெலங்கானாவில் முதல்முறையாக பெண் வாக்காளர்கள் அதிகம்!
அறிக்கையின்படி, மொத்தமுள்ள 8,054 வேட்பாளர்களில் 1,452 வேட்பாளர்கள்(18%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 959 (12%) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. 22 வேட்பாளர்கள் தங்கள் மீது கொலை வழக்குகள் இருப்பதாகவும், 82 பேர் கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் 107 பேர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வேட்பாளர்களில் 29% பேர் (2,371 பேர்) கோடீஸ்வர்கள். இவர்கள் அனைவரும் ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கிறார்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.36 கோடி.
தெலங்கானாவில்தான் அதிக வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இங்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 24% முதல் 72% வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. பெண்களுக்கு எதிராக 45 வழக்குகள், 27 கொலை முயற்சி வழக்குகள், 7 கொலை வழக்குகள் இதில் அடங்கும்.
மிசோரத்தில் மிகவும் குறைவாக 3% முதல் 10% வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் எந்த வேட்பாளர் மீதும் வழக்குப்பதிவு இல்லை.
அதிகபட்சமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 68% பேர் மீது வழக்குகள் உள்ளன. 43% பேர் கடும் குற்ற வழக்குகள்.
இரண்டாவது இடத்தில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி(48% பேர் மீது வழக்குகள்) உள்ளது. காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம், பாஜக, ஆம் ஆத்மி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.