மும்பையில் சிறுவன் கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி (கிழக்கு) புறநகர் பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நள்ளிரவுக்குப் பிறகு சிறுவனின் குடும்பத்தினர் போவாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அப்போது, வெளியே செல்வதற்கு முன் சிறுவன் தனது உடையை மாற்றிவிட்டதாக குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கின்றனர். உடனே காவல்துறையினர், லியோ என்ற டாபர்மேன் வகை மோப்ப நாயை அழைத்து வந்து அந்த சிறுவனின் சட்டையை மோப்பம் பிடிக்க வைத்துள்ளனர்.
சட்டையை மோப்பம் பிடித்த அந்த நாய், கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் அசோக் நகர் சேரியில் உள்ள தனது வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் சிறுவனைக் கண்டுபிடித்தது. கடத்தல்காரகள், காவல்துறையினருக்கு பயந்து சிறுவனை விட்டு சென்றதாக அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.