தில்லி கலவரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவன் உமர் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காலித் தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு இந்த விசாரணையில் ஆஜராகவில்லை. எனவே, நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ரஜ்னிஷ் பட்நாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் கோரி காலித்தின் மேல்முறையீட்டை நிராகரித்தது.
தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து மாணவர் உச்ச நீதிமன்றத்தில் காலித் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக வடகிழக்கு தில்லியில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் முக்கிய மூலையாகச் செயல்பட்டதாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உமர் காலித்திற்கு எதிரா வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலித் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.