/

41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தல்

இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று கனாவிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2023, 9:57 am

DIN

தில்லி: இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று கனாவிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜர், கனடாவில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பிருகலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றச்சாட்டை எழுப்பினார்.

இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்த போதிலும், கனடாவிலிருந்த இந்திய தூதரை அந்நாடு வெளியேற உத்தரவிட்டது.

இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரியை வெளியேற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், வருகின்ற 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தூதரக அதிகாரிகள் வெளியேறியவுடன் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு நாட்டு அரசும் இதுவரை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.