பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், வறுமை காரணமாக தங்களது 3 மகள்களை விஷம் கொடுத்துக் கொலை செய்து, வீட்டுக்குள் இருந்த பெட்டியில் அடைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான சுஷில் மண்டல் - மனைவி மஞ்சு ஆகியோரின் 4, 7, 9 வயதுடைய மூன்று மகள்களின் உடல்கள், அவர்களது வாடகைக் குடியிருப்பிலிருந்த பெட்டிகளுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மூவரும் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சுஷில் மண்டல் - மஞ்சு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் 2 வயதிலும், ஒரு வயதிலும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க.. பிப்ரவரியில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்சேவை?
ஞாயிற்றுக்கிழமை முதல் 3 குழந்தைகளைக் காணவில்லை என்று, வீட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் திங்கள்கிழமை அதிகாலை வந்து வீட்டில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சுஷில் மண்டல் குடிபோதையில் இருந்துள்ளார்.
காவல்துறையினர் வீட்டுக்குள் இருந்த டிரங்க் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் மூன்று மகள்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மண்டலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, வறுமை காரணமாக, தங்களது பிள்ளைகளுக்கு போதுமான உணவு கொடுக்க முடியாத காரணத்தால், ஞாயிற்றுக்கிழமை காலை, பாலில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்து, உடல்களை டிரங்க் பெட்டியில் அடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
குழந்தைகளைக் கொன்றுவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.