ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை (51) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். முன்னதாக, அவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே தில்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தொடக்கத்தில் இருந்தே இந்த ஊழல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்து வருகிறது. மேலும், பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அது தெரிவித்து வருகிறது.
இதையும் படிக்க | ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது
இந்நிலையில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டீகரில் ஆம் ஆத்மி கட்சியினர் இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.