கராச்சி: துபையில் இருந்து அமிர்தசரஸ் புறப்பட்ட துபை-அமிர்தசரஸ் ஏா் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமை கராச்சியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபையில் இருந்து சனிக்கிழமை காலை 8.51 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்பட்டு விமானம் வானில் பறந்துகொண்டிருந்துபோது பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கியது.
இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமான பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு உடனடி மருத்துவ உதவியை வழங்குவதற்கு அருகிலுள்ள இடம் கராச்சி என்பதால், விமானத்தை கராச்சிக்கு திருப்பிவிட ஊழியர்கள் முடிவு செய்தனர்.
விமான நிறுவனம், விமான நிலையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பயணிக்கு கராச்சியில் தரையிறங்கியவுடன் கராச்சியில் உள்ள விமான நிலைய மருத்துவர் தேவையான மருத்துவ சேவைகளை வழங்கியதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, விமான நிலைய மருத்துவக் குழுவினர் பயணியை பயணிக்க அனுமதித்ததாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதன் பின்னர், விமானம் கராச்சியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து, கராச்சி விமான நிலையத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளின் உடனடி பதில் மற்றும் உதவிக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் சக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.