திருவனந்தபுரத்தில் கனமழை பெய்து வருவதால் மூன்று ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை மத்திய நீர் ஆணையம் விடுத்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், நகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின. மாவட்டம் முழுவதும் 17 நிவாரண முகாம்களில் 572 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கனமழை நீடிப்பதால் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை, நெய்யாறு, வாமனபுரம் ஆகிய ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைத்தொடர்ந்து திருவனந்தபுரம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.