ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் கீழ் இஸ்ரேலிலிருந்து நான்காவது விமானம் மூலம் 274 இந்தியா்கள் தலைநகர் தில்லி திரும்பியுள்ளனர்.
ஹமாஸ் ஆயுதப் படையால் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள இஸ்ரேலில், சுமாா் 18,000 இந்தியா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தவா்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்டது.
முன்னதாக, ஏா் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திலிருந்து 212 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை காலை இந்தியா திரும்பினா். தொடர்ந்து, இரண்டாவது விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 235 இந்தியா்கள் தலைநகா் தில்லி திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் மற்றும் நான்காவது விமானங்கள் மூலம் இஸ்ரேலிருந்து 500-க்கும் மேற்பட்ட இந்தியா்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டது. இதற்காக பஞ்சாப்பின் அமிருதசரஸிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானமும் தில்லியிலிருந்து ஏா் இந்தியா விமானமும் டெல் அவிவுக்கு சனிக்கிழமை புறப்பட்டன. இவ்விரு விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) காலை தில்லி திரும்பின.
இந்த நிலையில், நான்காவது விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 274 இந்தியா்கள் தலைநகா் தில்லி திரும்பியுள்ளனர். இவா்களையும் சோ்த்து இதுவரை மொத்தம் 918 இந்தியா்கள் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று ரத்து!
இஸ்ரேலுக்குச் சென்ற 3-ஆவது விமானம் மூலம் 197 இந்தியர்கள் இன்று காலை தில்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.