வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி சந்தன மரங்கள் பதுக்கியதாக தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது கிராம மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதுடன் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். தமிழகத்தில் இந்த சம்பவம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 269 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கி கடந்த 2011 ஆம் ஆண்டு தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகள் 269 பேரில் 54 பேர் உயிரிழந்த நிலையில் 215 பேரும் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதி கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், முதல் குற்றவாளியான ஐஎப்எஸ் அதிகாரி நாதன், பாலாஜி ஆகியோரது மனுக்களை தள்ளுபடி செய்து அவர்கள் இருவரும் 6 வாரத்திற்குள் சரணடைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.