உ.பி., அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவர்களை தொழுகை நடத்த அனுமதித்ததற்காக அப்பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முதல்வர் மீரா யாதவ். இவர், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிலரை வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.
பள்ளி வளாகத்தில் தொழுகை நடத்துவது துறை ரீதியான வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என மாவட்ட அளவிலான கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் பள்ளி வளாகத்தில் சில குழந்தைகள் தொழுகை நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரியின் அறிக்கையைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் மீரா யாதவை இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பள்ளியின் மற்ற ஆசியர்களான தெஹ்சீப் பாத்திமா மற்றும் மம்தா மிஸ்ரா ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.