இந்தியா உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா விசா (நுழைவு இசைவு) வழங்குவதற்கான கொள்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி தெரிவித்தார்.
கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் அலி சாப்ரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமில்லா சுற்றுலா விசா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னோட்ட நடைமுறையில் இந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை இந்த முன்னோட்டத் திட்டம் நடைமுறையில் இருக்கும். அதன்படி, இந்த நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகள் கட்டணங்கள் எதுமின்றி விசா பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.