தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாப் பயணிகள். இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 2.2 கோடி வெளிநாட்டவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம், தாய்லாந்துக்கு 2,567 கோடி டாலர் வருமானமாக கிடைத்துள்ளது.
மேலும், தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் 12 லட்சம் இந்தியர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
மேலும், சுற்றுலா வரும் இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாள்கள் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மே வரை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் தைவான் நாட்டினருக்கும் விசாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.