

புது தில்லி: செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, தில்லியின் முக்கிய சாலைகளில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், காவல்துறை சோதனையை முன்னிட்டு சில நிமிடங்கள் முன்கூட்டியே கிளம்புவது நல்லது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியின் பல்வேறு பகுதிகளில், அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனையிடும் பணி இன்று காலை தொடங்கியிருக்கிறது.
இந்தியா கேட் மற்றும் இதர பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலையிலும் திடீரென காவல்துறை சோதனை தொடங்கி நடைபெற்றது. சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஜி20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் விருந்தினா்களை வரவேற்க மற்றும் மாநாட்டுக்கான பல்வேறு அடிப்படைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜி20 நாடுகளுக்கான கூட்டமைப்பிற்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கும் நிலையில், அந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்த வாரத்தின் இறுதியில் தேசியத் தலைநகரமான தில்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நகரம் முழுவதும் குறிப்பாக மாநாட்டுப் பிரதிநிதிகள் செல்லும் வழிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.