உத்தர பிரதேச மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கோசி தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌஹானை விட 42,759 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சமாஜவாதி வேட்பாளர் சுதாகர் சிங் 1,24,427, பாஜக வேட்பாளர் தாரா சிங் 81,668 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் கோசி தொகுதியை சமாஜவாதி கட்சி தக்கவைத்துள்ளது. பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌகான் கடந்த 2022 தேர்தலில் சமாஜவாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவர் பாஜகவுக்கு மாறியதால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அவர் அதில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.