தில்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்தாண்டும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க மாநில அரசு முடிவுசெய்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைநகரில் அனைத்து வகையான பட்டாசுகள் தயாரிப்புக்கும், விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,
நகரில் தடையை அமல்படுத்தத் தில்லி காவல்துறைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடை வைப்பதற்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பட்டாசுகளுக்குத் தடை விதிக்கும் நடைமுறையை தில்லி அரசு கடந்த 3 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது. கடைசி ஐந்து-ஆறு ஆண்டுகளில் தில்லியின் காற்றின் தரம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. எனவே, இதை இன்னும் மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். எனவே, இந்தாண்டும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம்.
கடந்தாண்டு தீபாவளியன்று தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி பட்டாசு உற்பத்தி விற்பனை செய்தாலோ ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று சுற்றுச்சூழலை காப்பதும் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.