கேரளத்தில் தொடர்ந்து 4- ஆவது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகவில்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இருவா் உயிரிழந்தனா். பரிசோதனையில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, உயிரிழந்தவா் ஒருவரின் 9 வயது மகன் உள்பட 4 போ் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
நிபா தொற்றின் பரவல் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
இந்நிலையில் கேரளத்தில் தொடர்ந்து 4- ஆவது நாளாக புதியதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வரும் மாதிரிகள் 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன.
மேலும் 49 மாதிரிகளுக்கு 'நெகட்டிவ்' அதாவது தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக அமைச்சர் இன்று(செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும் சிகிச்சையில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டோரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த சுகாதார ஊழியர்கள் இருவர் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நிபா எதிரொலியாக கேரளத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.