ஹிமாசலின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அண்மையில் பெய்த கனமழையால் ஹிமாசலில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. கனமழை பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக ரூ.10 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடியை ஹிமாசலுக்கு வழங்க முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தற்போது அந்த கோப்புகள் தில்லி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சுகு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலுக்கு உதவுமாறு தில்லி முதல்வருக்கு கடிதம் எழுதியிந்த நிலையில், ரூ.10 கோடியை நிவாரணமாக வழங்க தில்லி முதல்வர் முன்வந்துள்ளார்.
இது தொடர்பாக எழுதிய கடிதத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சுகு கூறியிருப்பதாவது: பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை ஹிமாசலில் அதிக அளவிலான உரிழப்புகள் மற்றும் பொருளிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாசலில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஹிமாசல் அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. கனமழையால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. கனமழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஹிமாசல் பாதிப்புகளை சரிசெய்ய மக்கள் தங்களது பங்களிப்புகளை வழங்க அரசு முயற்சி எடுத்துள்ளது. மக்கள் தங்களது பங்களிப்பினை வழங்கலாம் எனக் கூறியிருந்தார்.