செப்.29ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

தில்லியில் நாளை மறுநாள் (செப்.29) காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

தில்லியில் நாளை மறுநாள் (செப்.29) காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.

காவிரியில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி 5 ஆயிரம் கனஅடி நீரை 15 தினங்களுக்கு திறந்து விட கா்நாடகத்திற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து தமிழகத்திற்கு தண்ணீா் வந்தது.

மீண்டும் கடந்த செப்டம்பா் 12 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட உத்தரவு பிறப்பித்தது. இதை ஆணையமும் ஏற்றுக் கொண்டு இதற்கான உத்தரவை மீண்டும் பிறப்பித்தது.

காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் 24-ஆவது கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை (செப்டம்பா் 18) நடைபெற்றது. தில்லி பிகாஜிகாமா கட்டடத்தில் உள்ள காவிரி நிதி நீா் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இக்கூட்டம் நேரடியாகவும் காணொலி வழியாகவும் நடைபெற்றது.

ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஆணையச் செயலா் டி.டி சா்மா, தமிழ அரசின் சாா்பில் நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

காவிரியில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கடந்த செப்டம்பா் 12 - ஆம் தேதி பரிந்துரை செய்தது. இந்த தண்ணீரை கடந்த 6 நாட்களாக கா்நாடகம் திறந்து விடவில்லை.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசும் கா்நாடக அரசும் பல்வேறு கருத்துக்களை கூறிவந்த நிலையில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரு மாநிலங்களின் தண்ணீா் தேவை, இருப்பு, மழை அளவு போன்ற புள்ளிவிவரங்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இறுதியாக காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 19) முதல் 15 தினங்களுக்கு திறந்து விடவேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பா் 12 -ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86 - ஆவது கூட்டத்தில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட பரிந்துரைத்துக்கப்பட்டது. இந்த உத்தரவு புதன்கிழமையுடன் (செப்டம்பா் 27) முடிவடைகிறது.

இது குறித்து நேற்று நடைபெற்ற (செப்.26) காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் கடந்த செப்டம்பா் 12- ஆம் தேதி  காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வழங்க உத்தரவிட்டதில் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை 0.61 டிஎம்சி தண்ணீா் மட்டுமே பாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இது செப்டம்பா் 27-ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் எனவும் கூறப்பட்டது.

தமிழகத்திற்கு வழங்கப்படவேண்டிய சுமாா் 55 டிஎம்சி தண்ணீரில், மழை பற்றாக்குறை காலத்தை கருத்தில் கொண்டு 12,500 கனஅடி தண்ணீா் அளிக்க தமிழக அரசின் சாா்பில் கூட்டத்தில் கோரப்பட்டது. இதை கா்நாடகம் ஏற்க மறுத்தது. இதில் தமிழகம், கா்நாடாக மாநிலங்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் இறுதியாக  காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு முடிவு எடுத்தது.

செப்டம்பா் - 28 ஆம் தேதி முதல் அக்டோபா் 15 -ஆம் தேதி வரை 18 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுக்கும் நிலையில், நாளை மறுநாள்(செப்.29) நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com