நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் அரசின் வியூகம் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இருஅவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை கலவரம் தொடர்பாக இரு அவைகளும் தொடர்ந்து 10 நாள்களாக முடங்கி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்று மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நீடித்து வரும் நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.