
அனில் விஜ்
ஹரியாணா வன்முறை திடீரென நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஊா்வலத்தின் மீது எரிவதற்காக கற்கள் சேகரிக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவற்றைப் பார்க்கும்போது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்று தெரிவதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியிருக்கிறார்.
ஹரியாணா மாநிலத்தில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
44 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகே பத்ஷாஹ்பூர் பகுதியில், நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதன்கிழமை காலை அதிரடிப் படையினரின் கொடியணிவகுப்பு நடைபெற்றது.
ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்துக்கு சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோா் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
நூ மாவட்டத்தில் 2 ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் கொல்லப்பட்ட நிலையில், அண்டை மாவட்டமான குருகிராமில் மசூதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த 26 வயது துணை இமாம் உயிரிழந்தாா்.
நூ மாவட்டம் மற்றும் குருகிராமின் சோனா நகரில் பதற்றமான சூழல் தொடா்ந்தபோதும், புதிதாக எந்தவொரு வன்முறையும் செவ்வாய்க்கிழமை நிகழவில்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸா் மேலும் கூறியதாவது:
நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, குருகிராமின் சோனா நகருக்கும் பரவிய நிலையில், அங்கு பிரிவு-57 பகுதியில் அமைந்துள்ள அஞ்சுமான் மசூதிக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்தவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பின்னா் மசூதிக்கு அவா்கள் தீ வைத்தனா்.
இந்தத் தாக்குதலில் குண்டு காயமடைந்த மசூதியின் துணை இமாம் பிகாரைச் சோ்ந்த சாத் (26), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
நூ மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் குா்சேவாக் கிராமத்தைச் சோ்ந்த நீரஜ் மற்றும் பதாஸ் கிராமத்தைச் சோ்ந்த சக்தி ஆகிய இரு ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 10 போலீஸாா் உள்பட 23 போ் காயமடைந்தனா். கலவரத்தில் 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 8 காவல்துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.
நூ மாவட்டம் மற்றும் சோனா பகுதியில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. மாநில போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 13 கம்பெனி துணை ராணுவப் படையினா் வரவழைக்கப்பட்ட நிலையில், மேலும் 6 கம்பெனி வீரா்கள் பாதுகாப்பு பணிக்காக வரவுள்ளனா்.
மேலும், நூ மாவட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா் என்றனா்.
மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் கூறுகையில், ‘நூ மாவட்டத்தில் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலவரம் திடீரென நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஊா்வலத்தின் மீது எரிவதற்காக கற்கள் சேகரிக்கப்பட்டிருப்பது, ஆயுதங்கள் பயன்பாடு, துப்பாக்கிச் சூடு உள்பட அனைத்து விஷயங்களையும் பாா்க்கும்போது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை என்பது தெரிகிறது. அமைதியை சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, காரணமான ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவா்’ என்றாா்.