மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதையடுத்து வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்குச் செல்கிறார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து ஆக. 4 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மக்களவை செயலகம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தது. அரசு இல்லமும் அவருக்கு திரும்பி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக செல்லவிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
'ஜனநாயகம் வென்றது, நாடாளுமன்றத்தில் தங்களின் குரல் மீண்டும் ஒலிக்கிறது என வயநாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராகுல் எம்.பி. மட்டுமல்ல, வயநாட்டு மக்களின் குடும்ப உறுப்பினர் என்றும்' தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.