
திருப்பதி: திருமலை மலைப் பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலை நடைபாதையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியர்களுக்கு அனுமதியில்லை என நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை மலைப் பாதையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வனவிலங்கிடம் சிக்கிய 6 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலையேறி பாதயாத்திரை செல்லும் குழந்தைகள் கையில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், தொலைபேசி எண், போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் அடங்கிய டோக்கனை கட்டி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்.
இந்த நிலையில், நாளை திங்கள்கிழமை முதல் சிறுவா், சிறுமியர்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்வதற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம், மேலும் சில முக்கிய கட்டுப்பாடுளை விதித்துள்ளது.
அதன்படி, திருமலைக்கு செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் இனி 15 வயதுக்குட்பட்ட சிறுவா், சிறுமியர்களுக்கு அனுமதி இல்லை
இரு மலைபாதைகளிலும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
வனவிலங்குளின் நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை, இந்த முடிவுகளும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை அலிப்பிரி வழி நடைபாதை, வாகனங்கள் செல்லும் சாலைகளில் சிறுத்தை, புலிகள் நடமாட்டத்தை தேவஸ்தான் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது.
எனவே, திருப்பதி-திருமலை இடையே இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், பாதையாத்திரையாக செல்லும் பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாக செல்ல வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.