
புதுதில்லி: தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹார் பகுதியில் 32 வயதான கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் இன்று தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் சரிதா விஹார் பகுதியைச் சேர்ந்த முகமது சைதுல் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் இதற்கு முன்பு 15 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் நவம்பர் 16ஆம் தேதி, ஜாமியா நகர் காவல் நிலையத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பெண் ஒருவர் வெளியூர் சென்றதாகவும், தான் திரும்பி வந்தபோது, விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதைக் கண்டதாகவும் புகார் அளித்துள்ளார் என்று சிறப்பு காவல் ஆணையர் - (குற்றம் பிரிவு) ரவீந்திர சிங் யாதவ் தெரிவித்தார்.
புகாரைத் தொடர்ந்து ஜாமியா நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்ததில் காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். விசாரணையில், தான் போதைக்கு அடிமையானவர் என்றும், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளைக்கான இலக்கை தேடி குடியிருப்புகளில் சுற்றித் திரிந்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ள நிலையில் கொள்ளையனிடமிருந்து 5 மடிக்கணினிகள், 60 கிராம் தங்க நகைகள், 11 மொபைல் போன்கள், 15 கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.