தேர்தல் நிலவரம்.. தெலங்கானாவில் எம்எல்ஏக்களை கட்டிக்காக்குமா காங்கிரஸ்?

காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்திருக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நிலவரம்.. தெலங்கானாவில் எம்எல்ஏக்களை கட்டிக்காக்குமா காங்கிரஸ்?
Published on
Updated on
1 min read


தெலங்கானாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்திருக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான போட்டி நிலவக்கூடும் என்று சில கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பதால், எம்எல்ஏக்களை விலைகொடுத்து வாங்கும் சம்பவங்களைத் தவிர்க்க, ஏற்கனவே சில அரசியல் வரலாறுகளை மீண்டும் எதிர்கொள்ளாமல் தடுக்க இந்த முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறதாம்.

தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கட்சி வெற்றிபெறும் என்பதை உறுதியாக நம்புவதாகவும், ஆனால், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி முன்னிலை நிலவரம் தெரிய வந்தபிறகே எம்எல்ஏக்கள் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கை தொடங்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை 70க்கும் குறைவான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், உடனடியாக அனைத்து எம்எல்ஏக்களையும் பெங்களூரு அல்லது வேறு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படலாம் என்று மூத்த தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நடவடிக்கையில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரின் பங்கு முதன்மையானதாக இருக்கும் என்றும், ஏற்கனவே, 2018ஆம் ஆண்டு இதுபோன்ற சூழ்நிலையை அவர் சிறப்பாகக் கையாண்டதாகவும் கூறப்படுகிறது.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தன.

தெலங்கானா தனி மாநிலம் உருவான கடந்த 2014ஆம் ஆண்டுமுதல் அங்கு பிஆர்எஸ் ஆட்சி நீடித்து வருகிறது. தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ் கட்சி தேர்தல் களத்தை எதிர்கொண்டது. தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவும் களமிறங்கியதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம், தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்று தெரிய வந்துள்ளது. அதேவேளையில், தெலங்கானாவில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தங்களது எம்எல்ஏக்களை கட்டிக்காக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com