
மக்களவைத் தேர்தலில் எதிர்க்க வேண்டியது பாரதிய ஜனதா கட்சியையா அல்லது இடது ஜனநாயக முன்னணியையா என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய வேண்டும் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, “அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடது ஜனநாயக முன்னணி இரண்டும் உள்ளன.
இந்நிலையில் ராகுல் காந்தியை கேரளாவின் வயநாட்டில் போட்டியிட வைப்பதன் மூலம் காங்கிரஸ் பாஜகவை எதிர்க்கப் போகிறதா அல்லது இடது ஜனநாயக முன்னணியை எதிர்க்கப் போகிறதா?
எனவே ராகுல் காந்தி எதிர்க்கப்போவது பாஜகவையா அல்லது இடது ஜனநாயக முன்னணியையா என்பதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 15 வயது சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது வழக்கு!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடப் போவதாக வெளிவந்த தகவலுக்குப் பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக, “ராகுல் காந்தி கேரள மாநில அரசியலின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக, பாஜகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்பதில் ஆர்வம் காட்டலாம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்தன் தெரிவித்தார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.