நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மகாராஷ்டிரத்திலும் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய திரிபு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை திரிபான ஜேஎன்.1 வகை கரோனா வைரஸ், மகாராஷ்டிரத்தில் பரவியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனஜி சவந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும், எந்த நிலையையும் எதிர்கொள்ள மாநில சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடி தேவையான மருத்துவ உதவியை பெறுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
கேரளத்திலும் ஜேஎன் 1 திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர ராஜா நரசிம்மா இது பற்றி பேசுகையில், மாநிலத்தில் ஆறு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது பல மாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு பக்தர்கள் செல்லும் காலம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவை வெல்லும் ஒரே சக்தியாக தற்போது முகக்கவசம்தான் உள்ளது. மக்கள் அதனைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.