புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட உள்ள பணவீக்க அபாயத்திலிருந்து தப்பிப்பதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அமேசான், கூகுள், ஸ்விக்கி, ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணியாளர் குறைப்பு செய்து வருகின்றன.
இந்த வரிசையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சமீபத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சியில் நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வில் சுமார் 600 பேர் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் என்னுடன் 150 பேர் பயிற்சியில் இணைந்தோம். இந்த குழுவில், 60 பேர் மட்டுமே தேர்சி பெற்றனர். மற்ற அனைவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக விப்ரோ நிறுவனம் தொடக்க நிலை ஊழியர்கள் 450 பேரை பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும் பணிநீக்கம் செய்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு தொடங்கியது முதல் 308 நிறுவனங்களை சேர்ந்த 95508 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரபல லேஆஃப் வலைதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.