கிரேட்டர் நொய்டாவில் சனிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் காயமடைந்தனர் என்று கௌவுதம் புத் நகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிஸ்ராக் காவல் நிலையத்திற்குட்பட்ட கௌர் நகரில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுயபடம் (செல்ஃபி) எடுப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இரு குழுக்களும் டிசம்பர் 31 அன்று இரவு புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதையும் படிக்க- புத்தாண்டு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை!
சம்பவத்தில் காயமடைந்த 4 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க உத்தரபிரதேச காவல்துறை பல உத்தரவுகளை பிறப்பித்தது.
இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் மாநில தலைநகரான லக்னௌவில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.