புதுதில்லி: புதிய ஒருங்கிணைந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் (என்எப்எஸ்ஏ) கீழ் இன்று முதல் ஓராண்டுக்கு 81 கோடி பேருக்கு இலவச உணவுத் தானியங்கள் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த வாரம்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டில் 81 கோடி பயனாளிகளுக்கு புதிய ஒருங்கிணைந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் (என்எப்எஸ்ஏ) கீழ் 2023 டிசம்பர் வரை உணவுத் தானியங்களை இலவசமாக வழங்க அமைச்சரவை முடிவு செய்தது. இதையடுத்து இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:
புதிய ஒருங்கிணைந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் (என்எப்எஸ்ஏ) கீழ், 2023 ஜனவரி 1 முதல் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓராண்டுக்கு தகுதியான 81.35 கோடி பயனாளிகளுக்கு அரிசி, கோதுமை உணவுத் தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தை திறம்பட மற்றும் சீரான முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக 18 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் (ஜன.1) இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.