தில்லியில் காதல் முறிவால் இளம் பெண்ணை அழைத்துச்சென்ற முன்னாள் காதலன், அவரை கத்தியால் சரமாறியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. கத்தியால் குத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடக்கு தில்லியில் ஆதர்ஷ் நகர் பகுதியில் வசித்து வரும் 21 வயதான இளம் பெண்ணை சுக்விந்தர் (22) என்பவர் காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், இளம் பெண் வீட்டின் அருகே வந்த சுக்விந்தர், மன்னிப்புக் கேட்பதாகக்கூறி அப்பெண்ணை தனியாகப் பேச அழைத்துள்ளார். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சுக்விந்தர் சரமாறியாக இளம்பெண்ணை குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்த அப்பெண் கீழே விழுவது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அம்பாலா பகுதிக்குத் தப்பிச்சென்ற சுக்விந்தரை, தில்லி காவல் துறையினர் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.