வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தை மத்திய அரசு 1991-ஆம் ஆண்டு இயற்றியது. அச்சட்டத்தின்படி, நாடு சுதந்திரமடைந்தபோது வழிபாட்டுத் தலங்களின் மதம் சாா்ந்த வழிபாட்டு நிலை என்னவாக இருந்ததோ, அந்த நிலையை மாற்ற தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக வரலாற்று ரீதியில் வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோருவது தடை செய்யப்பட்டது.

அயோத்தியின் ராமஜென்ம பூமி விவகாரத்துக்கு மட்டும் அச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில விதிகளுக்கு எதிராக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 6 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிருந்தா குரோவா் வாதிடுகையில், ‘‘வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா இத்கா மசூதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்கெனவே நீதிமன்றத்துக்கு வந்துள்ளன. ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு இன்னும் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை’’ என்றாா்.

மனுதாரா்களுக்கு எதிராக ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘இந்த மனுக்களில் பொதுநலம் ஏதுமில்லை. குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தை மட்டும் குறிப்பிடாமல் பொதுவாக சட்டத்தின் விதிகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு மீது விரிவான விசாரணை நடத்தப்படுவதற்கு முன் இந்த விவகாரத்துக்குத் தீா்வு காணப்பட வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், வழக்குரைஞா் கபில் சிபலின் கோரிக்கை குறித்து விரிவான விசாரணையின்போது ஆராயப்படும் எனத் தெரிவித்தனா். மனுக்கள் குறித்து பிப்ரவரி இறுதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com