கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
கர்நாடகத்தில் இந்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யாத்திரை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் யாத்திரை நடைபெற்றது.
யாத்திரையின் ஒரு பகுதியாக, கர்நாடக மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களை யும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் திட்டங்களையும் டி.கே.சிவகுமார் பட்டியலிட்டார்.
கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், வேலையின்மை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவம் போன்றவை மிகுந்த செல்வாக்குடையவர்களுக்கானதாக மாறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேர்தலின் முதல் வாக்குறுதியாக இதனை தெரிவிக்கிறோம். பாஜக அரசு 10 மணிநேரத்துக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அதனை செய்ததா?. கடந்த முறை நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 7 மணிநேரத்துக்கு இலவச மின்சாரம் வழங்கினோம் எனக் குறிப்பிட்டார்.