புது தில்லி: தில்லியில் புத்தாண்டு பிறப்பின்போது, காரில் இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற இளம்பெண் பலியான சம்பவம் நடந்த சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுல்தான்புரியிலிருந்து, கஞ்சாவாலா பகுதி வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் அஞ்சலி சிங் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், அந்த பகுதிகளில் புத்தாண்டு இரவன்று பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
இதையும் படிக்க.. உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
இந்த விவகாரம் குறித்து சிறப்பு காவல் ஆணையர் ஷாலினி சிங் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் நடந்த பகுதியில் ஒரு காவலர் கூட ரோந்துப் பணியில் ஈடுபடாதது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் 31ஆம் தேதி இரவு, அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், காரில் இழுத்துச் செல்லப்பட்டதில் பலியானார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.