உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?

உலகின் மீக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கும் எம்வி கங்கா விலாஸ் சொகுசுப் படகுச் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடக்கி வைத்துள்ளார். 
உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?
உலகின் நீண்ட சொகுசுப் படகில் நாம் பயணிக்க முடியுமா? எவ்வளவு கட்டணம்?

உலகின் மீக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கும் எம்வி கங்கா விலாஸ் சொகுசுப் படகுச் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடக்கி வைத்துள்ளார். 

நாட்டின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு நதி வழியாகவே பயணிக்கும் வகையில், இந்த சொகுசுப் படகின் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. 

வாராணசியிலிருந்து சுமார் 51 நாள்களுக்கு 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதிக்குச் செல்லும் இந்தப் படகில் பயணிக்க நாள் ஒன்றுக்கு ஒரு பயணிக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொகுசுப் படகு நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சொகுசுப் படகில் ஏறி 51 நாள்களும் ஒருவர் பயணிக்க வேண்டுமென்றால் ரூ.20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.

சொகுசுப் படகின் புகைப்படங்களையும் விடியோக்களையும் பார்க்கும் போது சொர்க்கலோகம் போல காட்சியளிக்கும் இந்த படகில், 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுவார்கள். 

எம்வி கங்கா விலாஸ் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்..

எம்வி கங்கா விலாஸ் என்ற சொகுசுப் படகு, வாராணயிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, சுமார் 51 நாள்கள் 3,200 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்து வங்கதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியை அடையவிருக்கிறது. இது நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் சுமார் 27 நதிகளைக் கடந்து, இரண்டு நாடுகளைக் கடந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது.

51 நாள்கள் இந்த சொகுசுப் படகின் பயணத்தின் மூலம், நாட்டின் பல்வேறு கலாசார வேர்களையும், அதன் பன்முகத்தன்மையின் அழகான அம்சங்களையும் கண்டறியவும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.

மூன்று தளங்களைக் கொண்ட இந்த சொகுசுப் படகு 18 சொகுசு அறைகளுடன், 36 விருந்தினர்கள் பயணிக்கும் வகையில் அனைத்து அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசுப் படகின் ஒட்டுமொத்த பயணத்திலும் 32 சுவிட்சர்லாந்து பயணிகள் பயணிக்கின்றனர்.

இந்த சொகுசுப் படகுக்குள் சலூன், உடற்பயிற்சிக் கூடங்கள் என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படகில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. எனவே, படகிலிருந்து கழிவுநீர் கங்கையில் கலப்பது தவிர்க்கப்படும்.

நாட்டின் மிகச் சிறந்த அம்சங்களை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த படகின் பயணம் அமையும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சொகுசுப் படகானது நாட்டில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், தேசிய பூங்காக்கள், ஆற்றங்கரைகள், பாட்னா, பிகார் உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்கள் என 50 சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாசாரம், வரலாறு, ஆன்மிகம் உள்ளிட்ட விவரங்களை நேரடியாகப் பார்த்து உணரும் அதிர்ஷ்டம் இந்த படகுப் பயணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், பல ஆற்றங்கரையோர நகரங்களில் தங்கும் விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு, பல நகரங்கள் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருக்கும் பயணிகள், சிறிய படகுகள் மூலம் வாராணசிக்கு அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை இந்த படகு சேவை இயக்கப்படும். கங்கை ஆற்றில் மழைக் காலங்களில் நீர் அதிகரிக்கும் என்பதால், மூன்று மாதங்களுக்கு இந்தப் பயணம் நிறுத்திவைக்கப்படும்.

இந்த சொகுசுப் படகின் பயணத்தை, காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com