ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவுக்கு ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணமானது கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா வழியாக பஞ்சாபில் நடைபெற்று வருகின்றன.
இறுதியாக ஜம்மு - காஷ்மீருக்குள் நுழையும் நடைப்பயணமானது ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் தேசிய கொடியேற்று பொதுகூட்டத்துடன் நிறைவுபெறவுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் நகருக்குள் நடைப்பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜ்னி பட்டீல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் நடைபெறும் நடைப்பயணத்தில் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், ஸ்ரீநகர் நிறைவு விழாவில் நாடு முழுவதும் உள்ள 23 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மிகுந்த ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸின் நடைப்பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.