வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்புத் திட்ட நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: மெஸ்ஸியைச் சந்தித்த அமிதாப் பச்சன் (விடியோ)
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா மாற்றத்தை சந்தித்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு நாடு வேகமான வளர்ச்சியை அடையும்போது அதற்கு ஏற்றாற்போல் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. இதனை தற்போது இந்தியா பார்த்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய சாலைகள் உருவாக்கப்படும் போது அவை சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. இந்த புதிய சாலைகள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைகளுக்கு எளிதில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடிகிறது. அதேபோல அனைத்து விதமான இடங்களிலும் ரயில்வே பாதைகள் உள்ளன. இது போன்ற புதிய போக்குவரத்து வசதிகளின் மூலம் சுற்றுலாத் துறையும் மேம்படுகிறது. புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ள பலரது குடும்படுத்தில் முதலில் அரசு வேலையைப் பெறும் நபர்கள் அவர்களே ஆவர் என்றார்.
இதையும் படிக்க: ஒற்றுமை நடைபயணம்: ராகுலுடன் இணைந்த சிவசேனை எம்பி
இந்த ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்புத் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2.17 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.