ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை ஜம்முவில் நுழைந்தது.
இதையும் படிக்க- நம்ம ஸ்கூல் பவுண்டேசன்: அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் நிதி
இதனிடையே ஜம்முவின் நார்வல் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒற்றுமை நடைப்பயணம் எதுவாக இருந்தாலும் தொடரும்.
நடைப்பயணம் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதுதொடர்பாக துணைநிலை ஆளுநரை நான் சந்தித்தேன். ஜம்மு-காஷ்மீரில் உள்ள எங்கள் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.