ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 3,500 கி.மீ. தொலைவு கொண்ட இந்த நடைப்பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டு, கடந்த 13ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஆரம்பம் முதலே மக்களும், பல அரசியல் கட்சித் தலைவா்களும் திரளாகப் பங்கேற்று அவருக்கு உற்சாகம் அளித்தனர்.
இதையும் படிக்க- கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள்: முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு-காஷ்மீரின் லால் சௌக் பகுதியை அடைந்தது. அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மணிக்கூண்டு மண்டபத்தில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வின்போது ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி அவருடன் இருந்தார். நாளை (ஜனவரி 30) ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ராகுல் காந்தி தேசியக் கொடியினை ஏற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.
நாளை நிறைவுபெறும் நடைப்பயணத்தில் 12 எதிர்க்கட்சிகள் பங்கேற்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்கே மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ராகுல்காந்தியின் நடைப்பயண நிறைவு விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு 23 எதிர்க்கட்சிகளுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் 145 நாட்கள் மொத்தம் 4,000 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.