சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் 50-வது பிறந்தநாளை அக்கட்சித் தொண்டர்கள் தக்காளி வடிவிலான கேக் வெட்டி கொண்டாடினர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையை குறிப்பிடும் விதமாக மக்களுக்கு கட்சித் தொண்டர்கள் தக்காளி வழங்கினர். உத்தரப் பிரதேசதத்தின் அமேதி மாவட்டத்தில் வயலில் உள்ள நாற்றில் பிறந்த நாள் வாழ்த்துகள் அகிலேஷ் ஜி என ஆங்கிலத்தில் வடிவமைத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் பகுஜன் சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதையும் படிக்க: ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.61 லட்சம் கோடி!
யோகி ஆதித்யநாத்: சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் ராமர் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்கட்டும்.
மாயாவதி: நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்.
பிரியங்கா காந்தி: பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கட்டும்.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து கட்சித் தொண்டர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு விலைவாசி உயர்வு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது. நாங்கள் மக்களுக்கு இனிப்புகளை வழங்கியிருக்கலாம். இனிப்புகளின் விலையும் அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ 120 ரூபாயக உள்ளது. எங்களது கிராமத்தில் சப்பாத்திக்கு தக்காளிச் சட்னி செய்து சாப்பிடுவது வழக்கம். தற்போது தக்காளி விலை உயர்வால் அதுவும் எங்களது தட்டுகளிலிருந்து பறிக்கப்படுகிறது. அதன் காரணத்தினால் அகிலேஷ் யாதவ் அவர்களின் பிறந்த நாளில் மக்களுக்கு நாங்கள் தக்காளியை வழங்குகிறோம். தக்காளி விலை உயர்வை உணர்த்தும் விதமாக தக்காளி வடிவிலான கேக் வெட்டப்பட்டது என்றார்.