சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஹைதராபாத் வந்துள்ளார்.
முர்முவை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் பல மாநில அமைச்சர்கள் அவரை ஹக்கிம்பேட் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று முர்மு உரையாற்ற உள்ளார். கடந்தாண்டு ஜூலை 4-ம் தேதி ஆந்திரத்தின் பீமாவரத்தில் சீதராமா ராஜுவின் 30 அடி உயர வெண்கலச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
1897 ஜூலை 4ல் பிறந்த அல்லூரி சீதாராம ராஜு, பழங்குடி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர். 1922ல் தொடங்கப்பட்ட ராம்பா கலகம் எனப்படும் போராட்டத்தை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.