தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
17-ஆவது நாடாளுமன்றத்தின் 12 -ஆவது (மழைக்காலக் கூட்டம்) அமா்வு நாளை(ஜூலை 20) முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடா் தற்போதைய (பழைய) நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற இருக்கிறது.
மொத்தம் 17 அமா்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற மொத்தம் 28 மசோதாக்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 21 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஜெய்ராம் ரமேஷ் பேசியது:
“மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த விரும்புகிறோம். இரண்டாவதாக மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை கொண்டு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவோம்.
மூன்றாவதாக விலை உயர்வு, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை குறித்த பிரச்னையை எழுப்புவோம். தில்லி அவசர சட்டத்தை எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.