
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி அசாமில் மகளிர் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.
இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பழங்குடியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய நேரத்தில், கடந்த மே 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் நிலவரத்தைக் கண்டித்து, குறிப்பாக இரு பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரியும் அசாமில் மகளிர் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
படிக்க: எல்ஜிஎம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இது மனிதாபிமானமற்ற செயல், நாகரிக சமுதாயத்தின் மீதான தாக்குதல் ஆகும். இதை நம்மால் மறுப்பு தெரிவிக்கவே முடியாது. இந்திய சமூக வாழ்க்கையில் மிகக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அசாமின் மகளிர் காங்கிரஸ் குழுவின் தலைவர் மீரா போர்தகூர் கோஸ்வாமி தெரிவித்தார்.
மாநில அரசைக் கலைத்து உடனே மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்று அவர் கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...