மணிப்பூரில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி!

மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
மணிப்பூரில் பகுதியளவு இணைய சேவைக்கு அனுமதி!

மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. 

அதிலும் அங்கு சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதுபோன்று அங்கு மேலும் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

மணிப்பூரில் கலவரம் தொடங்கியது முதலே அங்கு இணைய சேவை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் நலன், பாதுகாப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் 85 நாள்களுக்குப் பிறகு அங்கு பகுதியளவு இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

பிராட் பேண்ட் எனும் தரைவழி இணைய சேவைக்கு மட்டும் அனுமதி. பயன்படுத்தப்படும் கணினியின் ஐ.பி. எண், பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும். 

வன்முறை தொடர்பான செய்திகள், விடியோக்கள், போலிச் செய்திகள் எதுவும் பகிரக்கூடாது. பகிரப்படும் அனைத்துத் தகவல்களும் சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும். மீறி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

மொபைல் போனில் இணைய சேவை பயன்படுத்தத் தடை; அதுபோல வை-பை, ஹாட்ஸ்பாட், விபிஎன் செயலி மற்றும் சேவை ஆகியவை பயன்படுத்தவும் தடை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் மேலும் கலவரம் ஏற்படுவதைத் தடுக்க இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த மே 3 ஆம் தேதி அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com