மும்பை: மகாராஷ்ரம் மாநிலம் மும்பையில் தொடர் கனமழை பெய்து வருவதை அடுத்து மும்பையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை(ஜூலை 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தில்லி, ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் நாக்பூர் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நரேந்திர நகர் ரயில்வே கீழ்ப்பாலம் மற்றும் விமான நிலைய நுழைவு சாலை ஆகியவை தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
"தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை மும்பையில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழையை முன்னிட்டு வியாழக்கிழமை(ஜூலை 27) மும்பை மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மும்பை பெருமாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.