ஒடிசா ரயில் விபத்து அரசின் தோல்வியைக் காட்டுவதாகவும், விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். ரயில்வே அமைச்சரின் பதவி விலகல் நிலைமையை மாற்றி விடாது என்றாலும், ரயில்வே அதிகாரிகள் பொறுப்பாக செயல்பட இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளின்போது அப்போது ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள் அதற்கான பொறுப்பேற்று பதவி விலகியுள்ளனர். அதே போல தற்போதைய ரயில்வே அமைச்சர் இந்த ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவரது பதவி விலகல் இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையாது. இருப்பினும், ரயில்வே அதிகாரிகளுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். நாட்டின் பல பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதையனைத்தையும் அரசு செயல்படுத்தும்போது, அப்பாவி பொதுமக்கள் பலரும் எந்த ஒரு தவறும் செய்யாமல் தங்களது உயிரை இழக்கின்றனர். இது ரயில்வே துறை மற்றும் அரசின் தோல்வியாகும் என்றார்.