
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த ஜூன் 2-ஆம் தேதி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
படிக்க: ஒடிசா ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 31 பேர் மாயம்!
இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்களில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்த 83 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக ரயில் விபத்தில் 288 பேர் பலியானதாக அறிவித்த நிலையில், மீண்டும் 275 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாரப்பூர்வமாக பலியானோர் எண்ணிக்கை 288 என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...