மும்பை: உயிரோடு இருப்பவர் தனது உடல் உறுப்புகளை தானமளிப்பதில் மனைவி மற்றும் தாய்தான் அதிக விழுக்காட்டினராக இருப்பதாக மருத்துவமனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகமே இன்று மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், உயிரோடு இருக்கும்போதே தனது உடல் உறுப்பை தானமாக அளித்த 10 பேரில் 7 பேர் மனைவி அல்லது தாயாக இருந்துள்ளனர் என்று தரவுகள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஒரு தனியார் மருத்துவமனை என்று எடுத்துக் கொண்டால், அங்கு நடந்த ஆயிரம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அறுவை சிகிச்சைகளில் உடல் உறுப்பை தானமாக அளித்தவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.
தனது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படும் போது, உடல் உறுப்புகளை தானமளிக்க பெண்கள் மறுப்பதில்லை என்ற ஒரு ஆழமான கருத்தையும் பல மருத்துவமனை மருத்துவர்கள் முன் வைக்கிறார்கள்.
இதையும் படிக்க.. அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரிக்கலாம்!
உடல் உறுப்புகளை தானமளித்த 70 சதவிகித பெண்களில் ஒரு சிறுநீரகம் அல்லது கல்லீரலின் ஒரு பகுதியை 35 சதவிகித பெண்கள் கணவருக்காகவும், மற்ற 35 சதவிகித பெண்கள் பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள், பிள்ளைகளுக்காகவும் தானமளித்துள்ளனர்.
இந்த 70 சதவிகிதத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 2 சதவிகித பெண்கள் தனது கணவரின் பெற்றோருக்கும் உடல் உறுப்புகளை தானமளித்துள்ளனர். பல அறுவை சிகிச்சைகளை அருகிலிருந்து பார்த்திருப்பதால், தியாகம் செய்வதிலும் தானமளிப்பதிலும் பெண்களுக்கு நிகரே இல்லை என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.
இதையும் படிக்க..அப்பாடா! கொருக்குப்பேட்டை மக்களுக்கு வருகிறது விடிவுகாலம்!!
வழக்கமாக, கணவர் அல்லது குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் தேவைப்படும்போது, மனைவியோ, தாயோ ஒரு போதும் தானமளிக்க மறுத்ததேயில்லை என்கிறார்கள் பல தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.