ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவருமான ஜெயந்த் பாட்டீலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி, அதன் தரப்பில் கடந்த 2018-இல் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, இந்நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ாக மத்திய பெருநிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தீவிர முறைகேடு விசாரணை அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) புகாா் பதிவு செய்தது.
அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த 2019-இல் விசாரணையை தொடங்கியது.
இதனிடையே, இந்த நிறுவனத்துக்கான தணிக்கை பணியை மேற்கொண்ட பிஎஸ்ஆா் அண்ட் அஸோசியேட்ஸ், டெலாய்ட் ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. இச்சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனா்.
இந்நிலையில், ஜெயந்த் பாட்டீலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.